ராமநாதபுரத்திலிருந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் வழியாக, புதிதாக இயங்க உள்ள 15 பேருந்துகளை, தமிழ்நாடு தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் இன்று ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், "கும்பகோணம் மண்டலத்திற்கு 300 பேருந்து புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரத்திலிருந்து இயங்கும்படி 15 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இயங்கி வரும் பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும்" என்றார்.
நீட் மசோதா நிராகரிப்பு குறித்து கேட்டபோது, "தமிழ்நாடு அரசு ஒருபோதும், நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்படாது. உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களில் நீட் அமல்படுத்தப்பட வேண்டும் என நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் பா.சிதம்பரத்தின் மனைவி நளினி. அவர்கள்தான் துரோகம் இழைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பனை சோதனை முயற்சிக்குக் கூட அனுமதிக்காது. ராமநாதபுரத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ். பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சதன்பிரபாகரன், அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.