இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் பச்சை மரகதக் கல்லாக எழுந்தருளியுள்ளார். சிறிய ஒளி கூட பச்சை மரகதத்திற்கு ஆகாது என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு சாத்தப்பட்டு மூலவர் காட்சியளிப்பார்.
ஆண்டிற்கு ஒருமுறை சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் சம்பவம் ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு இந்நிகழ்ச்சியானது நாளை காலை 8:00 மணிக்கு நடராஜருக்கு சந்தனப்படி களைதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 9:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கவுள்ளது.
பின்னர் நாள் முழுவதும் பக்தர்களுக்கு நடராஜர் காட்சியளிப்பார். இரவு 11:00 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜப்பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகமாக 32 வகையான அபிஷேகம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து புதிய சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு நடராஜர் அருள்புரியவுள்ளார்.
இது குறித்து திவான் மற்றும் நிர்வாக செயலர் பழனிவேல் பாண்டியன் கூறுகையில், ' கடந்தாண்டு ஆருத்ரா தரிசன திருவிழாவிற்கு 1.50 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளில் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அன்னதானமும், இரவு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாலும் வழங்கப்படவுள்ளது. புதுடெல்லியிலிருந்து பல்வேறு துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் வரவுள்ளனர்' என்றார்.
மேலும், ஆருத்ரா தரிசன பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி., வருண்குமார் கூறுகையில், ' ஆருத்ரா தரிசன விழாவிற்கு 500க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் சி.சி.டி.வி., கேமிரா அமைத்து கண்காணிப்புப் பலப்படுத்தப்படவுள்ளது‘ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு