ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 18 பேர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோய் பரவாமல் தடுக்க கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகள் இருக்கும் பகுதிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பல இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
களப்பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு வீரர்களில், ஆர்எஸ் மங்கலம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 29, 33 வயதுடைய தீயணைப்பு வீரர்கள் இருவருக்கு கரோனா நோய் தொற்று தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 பேர் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.