ராமநாதபுரம்: ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அதேபோல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தனர். தற்போது 16 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.