ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள், மீன்பிடித் தொழிலை செய்துவந்தனர்.
இந்த நிலையில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக விரட்டியடித்து வருகின்றனர்.
தொடர் அட்டூழியம்
மேலும், வலைகளை வெட்டி விடுவது, கற்களை எரிந்து காயப்படுத்துவது உள்ளிட்ட தொடர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு அச்சம் அடைந்து வருவதோடு, இன்று (ஆக.18) 100 விசைப்படகுகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
தற்போது டீசல் விலை அதிகமாக இருப்பதால், குறைந்தது ஒரு படகு கடலுக்கு செல்வதற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவுகள் ஆகின்றன.
மீனவர்கள் கோரிக்கை
அவ்வளவு செலவுகள் செய்து மீன்பிடிக்க சென்றாலும், இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தால் மீன் பிடிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் கரை திரும்புகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் இழப்பீடுகள் ஏற்படுவதால் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது போன்ற செயல்களால், ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழிலை செய்து வந்த பெரும்பாலான மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்பிடித் தொழிலுக்காக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பாரம்பரியமாக மீன்பிடிக்கும் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான நடைமுறையை கொண்டு வர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.