ராமநாதபுரம்: இலங்கையிலுள்ள கடற்பகுதிகளில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுதலைசெய்ய வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு திரும்பினர்.
ஆனால், தங்கச்சிமடம் ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மெசியா, சாம்சன் டார்வின், நாகராஜ், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படைத் தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்ததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகில் மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கைச் சிறையில் உள்ள 9 ராமேஸ்வரம் மீனவர்களையும், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையும் மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்று சனிக்கிழமையிலிருந்து மீன்பிடிக்கச் செல்வது என்றும், எல்லை தாண்டி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது, அதனை மீறும் மீனவர்கள் மீது மீன்துறை மீனவ சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: 'இடஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்பேன்' - சீமான்