கறுப்பர் கூட்டம் என்கின்ற யூ-டியூப் சேனல் மூலமாக இந்து கடவுள்கள் பற்றியும், தமிழ் கடவுள் முருகனின் பக்தி பாடலான கந்த சஷ்டி கவசம் மந்திரத்தை தரக்குறைவாகவும் மதங்களுக்கிடையேப் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தீய நோக்கத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை உடனடியாக தடை செய்வதோடு இதனை பதிவேற்றம் செய்த சுரேந்தர் ராஜன், ஆசிப் முகமது ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை அவர்கள் இருவரையும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்து முன்னணியினர் முருகன் வேடமிட்ட நபருடன் காவடி ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அவர்களை அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் மனு அளித்துச் சென்றனர்.