ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் 2004ஆம் ஆண்டு ராணுவத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தார். தற்போது ஹவில்தாராக பதவி வகித்து வரும் கருப்பசாமி ஓய்வு பெற்றார். 17 வருடங்கள் ராணுவ பணியை நிறைவு செய்து ஊர் திரும்பிய அவரை ஊர்மக்கள் ரயில்வே ஸ்டேசனில் இருந்து வீடு வரை மேளதாளங்கள் முழங்க வரவேற்று கேக் வெட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்த வரவேற்பு வைபவம் பரமக்குடி நகர் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் விழா நடத்தி வீடு வரை அழைத்து வந்து விட்டு பரிசு பொருள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். ஆனால் ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு இந்த மாதிரி விழா நடத்துவது இல்லை. பரமக்குடி சேது சீமை பட்டாளம் என்ற ராணுவ வீரர்கள் கருப்பசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து சேது சீமை பட்டாளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கூறுகையில், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது, மேலும் ராணுவ வீரர்களிடமே ஓய்வு பெற்ற பின் தகுந்த மரியாதை கிடைப்பதில்லை என்ற மனக்குறை உள்ளது. அதனைப்போக்க ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அடங்கிய குழு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.