சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் பிரதமர் மோடி வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். இந்தப் புகைப்படம் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது அதிக அளவில் பகிரப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் சீனிவாசன் என்ற நெசவாளர் இதை நினைவுகூரும் வகையில், இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் நெசவு செய்து அசத்தியுள்ளார்.
இது குறித்து சேலை வடிவமைத்த நெசவாளர் சீனிவாசன் கூறுகையில், "நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டுச் சேலையில்தான் புகைப்படத்துடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். ஒரு மாற்றத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு புகைப்படம் வைத்து நூல் சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேலையை நேராகப் பார்த்தால் இருநாட்டுத் தலைவர்கள் மட்டும் தெரியும் வகையிலும், சேலையின் பக்கவாட்டு பகுதியிலிருந்து பார்த்தால் மாமல்லபுரம் சிற்பங்கள் தெரியும் வகையிலும் முப்பரிமாண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருநாட்டுத் தலைவர்கள் அடங்கிய இந்தச் சேலை, சென்னையில் நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்தச் சேலையை வடிவமைக்க ஐந்து நாட்கள் ஆகும்.
பொதுமக்களிடையே இந்தச் சேலை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு படம் பொருத்திய, நூல் சேலை கேட்டு பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் முதன்முதலாக பரமக்குடியில்தான் புகைப்படத்துடன் கூடிய நூல் சேலை வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க:'தஞ்சாவூர் கோழிக் கறி, கருவேப்பிலை மீன் வறுவல்..!' - சீன அதிபருக்கு ஆஹா ஓஹோனு விருந்து