ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் , சிகிச்சைக்கான படுக்கை வசிதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தார்.
கரோனா பரவலை தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடவும், அதிகாரப்பூர்வ தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாகவும் http://ramanathapuramfightscovid.com/ என்ற புதிய இணையதளம் உருவாக்கப்ட்டுள்ளது .
குறிப்பாக , இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை மையங்கள் , சிகிச்சைக்காக உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள் , கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்கள் , கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அரசாணைகள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடுகள் ஆகியவற்றை இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
மேலும், கரோனா கட்டளை மையத்தின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே கணினி அல்லது கைபேசியின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம் .