கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாக தொடர்ந்து கடந்த சில நாள்களாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியது முதல் திருநெல்வேலியில் உள்ள பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர், தங்களின் சொந்த மாநிலத்திற்கு தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று இவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில், கூடுதல் ரயில் பெட்டிகளோ கூடுதல் ரயில்களோ இல்லாத காரணத்தினால், 23 பெட்டிகளைக் கொண்ட ரயில் ஒன்று, 52 நாட்களுக்குப் பிறகு பாம்பன் பாலத்தைக் கடந்து சென்று, தொழிலாளர்களை ராமேஸ்வரத்திற்கு இன்று காலை அழைத்து வந்தது.
இன்று இரவுக்குள் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் பயணிக்கும் இவர்கள் அனைவரும், உரிய மருத்துவ பரிசோதனைக்குகளுக்குப் பிறகு பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு சிறப்பு ரயில் மூலம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,463 பேர், காட்பாடியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம், டாடாநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து இதுவரை, வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்கள் உள்பட, பிகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த 6000க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் உணவு வழங்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி!