தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 345 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இதற்காக பாரதி நகர் டி பிளாக் அம்மா பூங்கா அருகே 22 ஏக்கரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டப்படவுள்ளது.
மருத்துவத் துறை துணை இயக்குநர் டாக்டர் சபிதா தலைமையிலான குழு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளையும், அதனைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மற்றும் தங்கும் விடுதி அமையவுள்ள அம்மா பூங்கா பின்புறம் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை துணை இயக்குநர் சபிதா, "ராமநாதபுரத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக இங்கு வந்துள்ளோம். இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்கத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் 12 ஆயிரம் சதுர மீட்டர் இடம் இருப்பதால், அதில் தேவையான கட்டுமான பணிகளைச் செய்வோம். இதுதவிர மருத்துவக் கல்லூரி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை அம்மா பூங்கா அருகே அமைய இருக்கிறது. அதற்கான பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது