ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடையாளம் தெரியாத சிலரால் இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு மாடுகளை கிளியூர் கிராம சாலை வழியே ஒரு கும்பல் இன்று (ஜன.13) கடத்திச் செல்வதாக நயினார்கோவில் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நயினார்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அந்த வாகனத்தில் இரண்டு காட்டு மாடுகள் இருந்ததையடுத்து, கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த ஏர்வாடியைச் சேர்ந்த சேக் முகம்மதிடம் மேற்கொண்ட விசாரணையில், மாடுகளை திருடிய கும்பலின் தலைவனாக அவர் செயல்பட்டது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சேக் முகம்மதுடன் பொட்டகவயல் கிராமத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம், முர்ஜல் இப்ராஹிம், அல்ஜவான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் மாடுகளை திருடுவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்!