ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி, மண்டபம், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 51 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, 159 குக்கிராமங்களில் ரூ. 33 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு குழாய் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட களிமண்குண்டு ஊராட்சியில் உள்ள குத்துக்கல்வலசை, குப்பைவலசை, களிமண்குண்டு ஆகிய குக்கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (ஜனவரி 7) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட 1,061 குடியிருப்புகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இதற்காக மொத்தம் ஒன்பது மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஏழு தொட்டிகள் தலா 30 ஆயிரம் லிட்டர் மற்றும் இரண்டு தொட்டிகள் தலா 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.