ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி தென்கடல் கடற்கரையில் டால்ஃபின் ஒன்று இறந்த நிலையில் இன்று (ஆக. 24) காலை கரை ஒதுங்கியது. இதை அப்பகுதி மீனவர்கள் இழுத்து மணல் பகுதிக்கு கொண்டு வந்து வைத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சுமார் 50 கிலோ எடையையும் ஐந்து அடி நீளத்தையும் கொண்டிருந்த அந்த டால்ஃபினின் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. கால்நடை மருத்துவரைக் கொண்டு முறையாக உடற்கூறாய்வு செய்து உயிரிழந்த மிருகங்கள், கடல் வாழ் உயிரினங்களை வனத்துறையினர் புதைக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழந்த உயிரினங்களின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய முடியும்.
ஆனால் அடிபட்டு காயமடைந்த டால்ஃபினை, வனத்துறையினர் உடற்கூறாய்வு செய்யாமல் அங்கேயே புதைத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல் சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் அடிக்கடி கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. வனத்துறை அலுவலர்கள் இதனைக் கண்டுகொள்ளாததால் கடற்கரை ஓரங்களிலே அழுகிய நிலையில் கடல் ஆமைகள் மணலில் சிதைந்து போகின்றன. இதனால் அப்பகுதி அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, வனத்துறையினர் முறையாக கடல் பகுதிகளில் ரோந்து நடத்தி, கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.