புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் 500 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அந்த நோட்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் வந்து விசாரித்தபோது, ஜெயராஜ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், ஜெயராஜும் அவரது நண்பர்கள் வேலு, பழனியப்பன் ஆகியோர் இணைந்து காமராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காமராஜபுரம் சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிலிருந்து 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய ஸ்கேனர், பிரிண்டர் போன்ற உபகரணங்களை பறிமுதல் செய்ததோடு, ஜெயராஜ் கூட்டாளிகளின் காரையும் பறிமுதல் செய்தனர்.
ஜெயராஜ் கும்பலை கைதுசெய்த காவல்துறையினர், அந்த கும்பல் கடந்த ஒன்றரை வருடமாக கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.