புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, ராணுவ முறைப்படி கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்காண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுக்கோட்டையில் அனைத்துத் துறை அலுவலர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்துவருகிறார்கள். அனைத்து இடங்களிலும், கிருமி நாசினியை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தெளித்துவருகின்றது.
அரசின் ஆணைப்படி நடமாடும் காய்கறி வண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு பையில் 150 ரூபாய்க்கு காய்கறிகள் வழங்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனைக் கல்லூரி, ஆய்வகங்கள், இராணியார் அரசு மருத்துவமனை என அனைத்திலும் போதுமான வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் 8 மருத்துவக்கல்லூரிகளில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 110 தனியார் மருத்துவனைகளிலும் கரோனாவை கண்டறிய மத்திய அரசிடம் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுள்ளோம்.
ஒரு நாளைக்கு 60 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் முகக்கவசங்கள் தேவைப்படுகின்றது. இதனால் ஒன்றறை கோடி முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். தொடுதல் மூலமாக தான் 80 விழுக்காடு கரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. எனவே மக்கள் அனைவரும் பயம், பதற்றம் இல்லாமல் தங்களை தனிமைப்படுத்தி வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்.
தனியார் மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அனைவருக்கும், உலக சுகாதார மைய அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கரோனா வைரஸ் தொற்று குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் நாள்தோறும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: விளக்கு ஏற்றுவது தமிழர் பாரம்பரியம் - அமைச்சர் உதயகுமார் விளக்கம்!