புதுக்கோட்டை: அன்னவாசல் அடுத்த முக்கண்ணாமலைப்பட்டியைச்சேர்ந்தவர், முகமது ரபீக். இவரது மகன் முகமது பாசில். பிறவியிலேயே பார்வை இழந்த 20 வயதான முகமது பாசில், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி சென்று வர முக்கண்ணாமலைப்பட்டி - புதுக்கோட்டை வழி அரசுப் பேருந்தையே பயன்படுத்தி வந்துள்ளார்.
வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு திரும்ப புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை செல்லும் அரசுப்பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் நடத்துநர் முருகேசன் பயணச்சீட்டு வாங்க வலியுறுத்திய நிலையில், அரசால் தனக்கு வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்து காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்க பயணச்சீட்டு கேட்டுள்ளார்.
நடத்துநர் முருகேசன், அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்; டிக்கெட் வாங்காவிட்டால் பேருந்தில் இருந்து கீழ் இறக்கிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதையடுத்து முகமது பாசில் தன் உறவினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைக்கூறி நடத்துநரிடம் போனை வழங்கி உள்ளார். அவரிடமும் டிக்கெட் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என்று நடத்துநர் முருகேசன் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அரசு வழங்கிய அடையாள அட்டை இருந்தும் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கும் நிலைக்கு, முகமது பாசில் தள்ளப்பட்டார். காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கி வீடு திரும்பிய, முகமது பாசில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோர், உறவினர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார்.
இரண்டு கண்களும் தெரியாது, அரசு கல்லூரியில் படிக்கும் மாணவன் எனக்கூறியும் டிக்கெட் வாங்கவில்லை என்றால் பேருந்தை விட்டு இறக்கிவிடுவேன் என நடத்துநர் கூறியது, முகமது பாசிலின் மனதில் ஆறாத வடுவாய் மாறியது. மேலும் தனக்காக பேருந்தில் இருந்த யாரும் பரிந்து பேசாதது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக முகமது பாசில் கூறுகிறார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாகப் பதிவு செய்த முகமது பாசில், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். பாசிலின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி நெட்டிசன்களின் கருத்துகளுக்குள்ளானது. மேலும் பலர் சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோரிக்கை எழுப்பினர்.
வீடியோ போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கண்களில் தென்பட சம்பந்தப்பட்ட நடத்துநரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் உண்மை வெளிவந்த நிலையில், தான் தவறு செய்துவிட்டதாகவும், மன்னித்து விடுமாறும் நடத்துநர் முருகேசன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அரசுப்பேருந்து நடத்துநர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவலை அறிந்த மாற்றுத்திறனாளி மாணவரான முகமது பாசில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தான் ஒருவன் பாதிக்கப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட நடத்துநரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் நடத்துநரின் குடும்பம் பாதிக்கப்படும் என்றும்; இனிமேல் தன்னைப்போல மாற்றுத்திறனாளிகளை இதுபோன்று அரசுப்பேருந்து நடத்துநர்கள் அவமதிக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளான தங்களைப் போன்றவர்கள் உடல் அளவில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனதளவில் தாங்கள் அனைவரும் முழு தைரியத்தோடு தான் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அப்படிப்பட்ட சூழலில் தங்களை இழிவாக யாரும் நடத்த வேண்டாம் என்றும் மீண்டும் முகமது பாசில், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவரின் வேண்டுகோள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கே நெகிழ்வை ஏற்படுத்தினாலும் விதிமுறைகளின் அடிப்படையில் அரசுப்பேருந்து நடத்துநர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் நடத்துநர் முருகேசன் மீண்டும் பணிக்கு வரும்போது வேறு மண்டலத்திற்கு மாற்றப்படுவார் என போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அழைப்பு...!