புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் சுதந்திப் போராட்ட தியாகியான தீரர் சத்தியமூர்த்தி பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்துகொண்டு பூங்காவை திறந்துவைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கனவுலகத்தில் வாழ்ந்துவருகிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளளோம். இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், இரண்டு தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த வெற்றியைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு ஒரே நாளில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை பெருமிதத்தோடு குறிப்பிட்டார். எவ்வளவு விரைவாக அனுமதி கிடைத்ததோ அவ்வளவு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.