புதுக்கோட்டை மாவட்டம் ராம் தியேட்டர் அருகே உள்ள டீக்கடையிலிருந்த நபரை, மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென ஆயுதங்களுடன் தாக்க முயன்றனர். இதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடியுள்ளார். அவரை துரத்தி சென்ற கும்பல், நடுரோட்டில் வைத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு வாகனத்தில் தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், படுகாயமடைந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கல்லாலங்குடி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முன்விரோதம் காரணமாக அவர் வெட்டப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.