புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 2019 அக்டோபர் 5 அன்று இரவு கறம்பக்குடி சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கறம்பக்குடி காவல் நிலைய ரவுடி பதிவேட்டில் உள்ள கறம்பக்குடியைச் சேர்ந்த ஐயப்பன் (25) என்பவர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஓட்டிவந்தார். அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர்கள் ஐயப்பனின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டனர்.
அதற்கு ஐயப்பன் சிகரெட் புகையை காவலர்களின் முகத்தில் ஊதி, அவதூறான சொற்களால் திட்டி, அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்ததோடு சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்தார்.
இத்தோடு நில்லாமல் இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து சிறப்பு உதவி ஆய்வாளரின் நெஞ்சில் குத்திக் கொலைசெய்ய முயற்சித்து மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று (அக்டோபர் 4) மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐயப்பனுக்கு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விவரம்:
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 332இன்படி ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும்,
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307இன்படி ஏழாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி அப்துல் காதர் மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேச வன்முறை: 18 பேர் கைது