புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வெள்ளாளவிடுதி என்ற பகுதியில் தவமணி என்ற ஆசாரி அந்த பகுதியில் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறார். மர ஆசாரி தொழில் செய்வது மட்டும் அல்லாமல் வட்டிக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி இரவு தனது சொந்த வயலுக்கு லைட் போடுவதற்காக வழக்கம்போல் சென்றுள்ளார். ஆனால், தவமணி காலைவரை வீட்டிற்கு வராததால் வயலில் சென்று உறவினர்கள் பார்த்தனர். அப்போது அங்கு மிளகாய்த்தூள் கொட்டி கிடந்திருக்கிறது பின்பு அந்த பகுதியில் விசாரித்தபொழுது நான்கு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை மிளகாய் தூள் அடித்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
பின்னர் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் வைத்து விசாரணை செய்து வந்தனர். மேலும் தவமணி தொலைபேசியில் இருந்து அவரது மகளுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்ததாகவும், அவ்வாறு கொடுக்காவிட்டால் அவரைக் கொன்று விடுவோம். என்று கொலை மிரட்டல் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து கடந்த ஜூன் 18ஆம் தேதி புகார் அளிக்கப்பட்ட வழக்கில் புகாரின் பேரில் 26 ஆம் தேதி முதல் தேடுதல் துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வந்த நிலையில், அவரது மனைவிக்கு தொடர்ந்து பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒரு நபரை பிடித்து காவல்துறை விசாரணை செய்தபோது அவர், தவமணியை கொலை செய்து அவரது தலையை காவிரி ஆற்றில் தூக்கி வீசி எறிந்ததாக கூறியுள்ளார்.
அதனடிப்படையில் தற்போது புதுக்கோட்டை டிஎஸ்பி கோ பாலச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் கல்லணை அருகே உள்ள தோகூரில் உள்ள காவிரி ஆற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.