புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. 2016ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்கள் ஷரத்துகள் குறித்து எந்தவிதமான கருத்தும் இடம்பெறவில்லை.
திமுக எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடமும் சிக்கவில்லை. தேர்தலை சந்திப்பதற்குத் தற்போது உள்ள சூழ்நிலையில் புது யுக்திகள் தேவைப்படுகின்றன. அதன் காரணமாகவே ஒரு நிறுவனத்திடம் திமுக புதிய உத்திகளைச் செயல்படுத்துவதற்கு அளித்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகளும் இதேபோன்று இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
திமுக மற்றவர்களைப் போன்று நிமிடத்திற்கு நிமிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் கட்சி கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தவிடாமல் எதிர்த்துவந்தார். தற்போதைய அதிமுக அரசு அவற்றைச் செயல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கிடையாது.
பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. யார் அரசியலுக்கு வந்தாலும் தேர்தலில் நின்றாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான விரிசலும் இல்லை, புதுச்சேரியில் தேர்தலுக்காக திமுக பொறுப்பாளரை நியமிப்பது வழக்கமான ஒன்று. அதேபோன்றுதான் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது” என்றார்.