மோட்டார் வாகனச் சட்டப்படி தமிழகத்தில் தற்பொழுது ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் ஹெல்மெட் அணிவதால் தவிர்க்கப்படும் என்பதால், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலையைச் சேர்ந்த ஆண்கள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, 119 வருடங்களாக நாங்கள் இந்த மெய்வழிச்சாலை மதத்தை கடைபிடித்து வருகிறோம். எந்த ஒரு ஜாதி மதம் இல்லாமல் என் தமிழ்மொழிச் சாலையில் வசித்து வருகிறோம். நாங்கள் அணியும் தலைப்பாகையை தூங்கும்பொழுது மட்டுமே கழற்றி வைப்போம், மற்ற நேரங்களில் அதை அணிந்தே இருப்போம். ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை வந்தபொழுது தலைப்பாகையைக் கழட்ட வேண்டுமா என்ற கோணத்தில் சிந்தித்தோம்.
பஞ்சாபில் தலையில் டர்பன் அணிந்திருக்கும் சிங்குகள் ஹெல்மெட் அணிவதில்லை. அதை மனதில் கொண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம். மேலும், எங்களது தலைப்பாகை ஆறு சுற்றளவு கொண்டு தடிமனாக இருப்பதால் ஹெல்மெட்டை போன்று பாதுகாப்பானதாக இருக்கும். எனவே, எங்களது தலைப்பாகை பாதுகாப்பானதா என ஆய்வு செய்த பின்னரே அரசாங்கம் 2007இல் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளித்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.
இதையும் படிங்க:
சாலையில் வைத்து முத்தலாக் சொன்ன கணவன்; புகாரளித்த புதுக்கோட்டை பெண்!