தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் என நான்கு ஒன்றியங்கள் உள்ளன.
டிசம்பர் 27-ஆம் தேதி பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களுக்கும், டிசம்பர் 30ஆம் தேதி வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வேப்பூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் உறுப்பு கல்லூரியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் உடும்பியம் பகுதியில் உள்ள ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பதிவு செய்யப்படும் வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தேசிய ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி, மாவட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சேலத்தில் காவல் துறை பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு!