விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மழையை நம்பியே பெருவாரியான சாகுபடியை செய்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 73 ஏரிகள் உள்ளன. இந்நிலையில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 14 ஏரிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்குவதற்கு தமிழக அரசின் மூலம் ரூபாய் 3 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர், ’அரும்பாவூர், கீழப்பெரம்பலூர், கீழையூர் உள்ளிட்ட 14 ஏரிகளில் கரையைப் பலப்படுத்துதல், தூர்வாருதல், பாசன மதகுகள் அமைக்கும் பணிகள், ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதாகவும், அடுத்த வாரத்திற்குள் இப்பணிகள் முடிவடையும்’ என்றும் கூறினார்.