பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஏழுமலை (17). இவர், பாடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அலுந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் கீர்த்திராஜ் (15). அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நண்பர்களான ஏழுமலை, கீர்த்திராஜூ ஆகிய இருவரும் நேற்றிரவு செட்டிக்குளத்திலிருந்து ஆலத்தூர் கேட் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். செட்டிக்குளம் புரிவு சாலை அருகே சென்றபோது எதிரே சைக்கிளில் சென்ற ரெங்கநாதன் (40) என்பவர் மீது மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது, அதே வழித் தடத்தில் ரப்பர் ஏற்றிவந்த லாரி இளைஞர்கள் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, கீர்த்திராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி