நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி ராமன். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சத்தியா அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் வாகன ஓட்டுநர் ராமமூர்த்தி. இவருக்கும், சத்தியாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ராமன், சத்தியாவை கண்டித்து, ராமமூர்த்தியுடனான உறவை கைவிடுமாறு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார்.

இருந்தபோதிலும் அவர்களது உறவு தொடர்ந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுவந்தது. இந்நிலையில், மே 20ஆம் தேதி காலை அலறியடித்தபடி வீட்டைவிட்டு வெளியே வந்த சத்யா, வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவர் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்களிடம் கதறியபடி தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் ராமனின் உடலுக்கு சடங்குகள் செய்து எரியூட்டினர். இருந்தபோதிலும் ராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் லட்சுமணன், நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்டமாக சத்தியாவிடம் நடத்திய விசாரணையில், சத்தியா தனது கணவருக்கு இரவு உணவில், தூக்கமாத்திரைகளை கலந்து கொடுத்ததையும், நள்ளிரவில் ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சத்தியா, ராமமூர்த்தி ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்த கணவர் - மனைவி தீக்குளித்து தற்கொலை!