இந்திய விண்வெளி ஆய்வு மையம் பயணத்தின் முக்கிய நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22 அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது. பல கட்டங்களுக்குப் பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்தபோது இந்த மாதம் இரண்டாம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டில் இருந்த விக்ரம் தனியாகப் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்ட இந்த விக்ரம் லேண்டரை தரை இறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கினர்.
அதன் இறுதியாக இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்காக இந்தியாவே விழிப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பாராத வகையில், விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்ட்ரின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும் எனப் பலமுறை பூமியில் சோதனை செய்யப்பட்டது. அதன் முன்னோட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள சித்தம் பூண்டி, பாமாகவுண்டன்பாளையம், குன்னமலை கிராமப் பகுதிகளில் 'லூனார்சாயில்' இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த பாறைகளை வெட்டி பெங்களூருக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் இஸ்ரோ விஞ்ஞானி வேணுகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அந்த பாறை வகையைப் பயன்படுத்தி, 50டன் அளவிற்கு மாதிரிகளைச் சேகரித்து பெங்களூருக்கு அனுப்பி சந்திரயானின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது. இந்நிலையில் சந்திரயானின் சோதனைக்காக மண் கொடுத்த ஊரிலிருந்து பொதுமக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
குன்னமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் குழந்தைவேலுவிடம் பேசுகையில் "சித்தம்பூண்டி, பாமாகவுண்டம்பாளையம்,குன்னமலை ஆகிய கிராமங்களில் விஞ்ஞானிகள் பல கட்டங்களாக ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியின் முடிவில் தங்கள் ஊர் மண்ணும் நிலவில் இருக்கும் மண்ணுடன் ஒத்துப்போவதாகத் தெரிவித்திருந்தனர். இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்ட நாளிலிருந்தே தங்களது கிராம மக்கள் கூர்ந்து கவனித்துவந்தனர். இந்நிலையில் இன்று காலை தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சாத்தியப்படாமல் போனது. இதனை எண்ணி இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையடைய வேண்டாம். சந்திரயான்-2 மூலம் உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பியுள்ளது. தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்” என்றனர்.