திருச்செங்கோடு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 26 ஊராட்சிகளில், 21 ஊராட்சிகளை சேர்ந்த 32 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் தங்கமணி பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அந்தந்த ஊராட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஆதரவு கேட்டு தங்கமணி பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் மக்களிடம் பேசிய தங்கமணி, “நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றிபெற்ற பின் நன்றி சொல்லக் கூட வராத மக்களவை உறுப்பினர் சார்ந்த திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். உள்ளாட்சி தேர்தல் காலம் தாழ்த்தி வந்தமைக்கு திமுகவினர்தான் காரணம். கடந்தாண்டுகளில் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டதையும் திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் மக்கள் விழித்துக்கொண்டனர்.
திமுகவினரின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.” என்றார்.
பரப்புரையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை