கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.சரோஜா மற்றும் ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதலாவதாக நாமக்கல் அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவர் கண்ணப்பன் மற்றும் இரண்டாவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, ”நாமக்கல் மாவட்டத்திற்கு 8,700 டோஸ் கரோனா தடுப்பூசி வந்துள்ளது. அதில் முதல் கட்டமாக, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் என 7,500 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் அவர்களுக்கு முன்னிரிமை அளிக்கப்படும்.
இன்று நாமக்கல் அரசு மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் அச்சமடைய வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது- அப்போலோ குழுமத் தலைவர்