நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் படுகை அணையின் இடது கரையிலிருந்து உருவான ராஜவாய்க்காலானது, 79.04 கி.மீட்டர் வரை சென்று மோகனூரில் நிறைவடைகிறது. இதில் சம்மந்தப்பட்ட ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், மோகனூர் வாய்கால்கள் மூலம் 16,143 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வாய்க்கால்களின் கான்கிரீட் சுவர் கட்டவும், வாய்க்காலின் கரைகளை பலப்படுத்தவும், மதகுகள், மிகுதிநீர் போக்கி மதகுகள் பழுதடைந்ததை சீரமைக்கவும், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 184 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடக்கப்பட்டது.
இந்நிலையில், பரமத்திவேலூர் அடுத்த நஞ்சை இடையார் பகுதியில் நடைபெற்று வரும் ராஜவாய்க்கால் புனரமைக்கும் பணியை நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.