மாதிரி வாக்குப்பதிவானது ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சுமார் 50 வாக்குகள் செலுத்தப்படும். மாதிரி வாக்குப்பதிவை அனைத்து அரசியல் பிரமுகர்கள், அவர்களது பிரதிநிதிகள் என அனைவரும் கலந்துகொண்டு செலுத்துவார்கள். சோதனைக்காக இவை நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து மாதிரி பதிவுகள் அழிக்கப்பட்ட பின்னரே மீண்டும் பொது மக்கள் தங்களது வாக்குகளை பதிவிட அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், நாமக்கல் தெற்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பிங்க் வாக்குச்சாவடி மையத்தில் 50 மாதிரி வாக்குப்பதிவுகளை நீக்கம் செய்யாமலேயே பொதுமக்கள் வாக்குப்பதிவை செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 21 வாக்குகள் பதிவான நிலையில் மொத்தம் 71 வாக்குகள் பதிவாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்தல் அலுவலர்கள், வாக்குப்பதிவை திடீரென நிறுத்தினர்.
பின்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகள் உட்பட அனைத்து வாக்குப்பதிவுகளும் நீக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவானது தொடங்கியது.
தங்களது வாக்குகளை ஏற்கனவே பதிவு செய்த 21 வாக்காளர்கள், மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு காரணமாக சிறிது நேரம் பிங்க் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.