நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் மருத்துவமனை வளாகத்தில் பொறுத்தப்பட்டு இன்று (நவ.3) முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
முன்னதாக கரோனா நோயாளிகளுக்கென சிறப்பு பிரிவு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகரித்தது.
தினந்தோறும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஈரோட்டில் இருந்து போக்குவரத்து மூலம் நிரப்புவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். இதனால் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டரை பொருத்துவதற்கு நிதி ஒதுக்குமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாடு அரசு 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டு இன்று (நவ.3) முதல் கரோனா மற்றும் பிற நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. வாரம் ஒரு முறை இந்த சிலிண்டரை நிரப்பினால் போதுமானது.
இந்த ஒரு ராட்சத சிலிண்டர் ஆயிரம் சிலிண்டர்களுக்கு சமம். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது. கரோனா பரவல் முடிவுக்கு வருவது மக்கள் கையில் தான் உள்ளது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, தகுந்த இடைவெளியினை பின்பற்றுவது மூலமாகதான் நோய் பரவல் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயிலில் சிறப்பு வழிபாடு!