மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள ராதாநல்லூரில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா முருகனுக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கிவருகிறது. இந்த சூளையிலிருந்து செங்கல்களை லாரிகளில் எடுத்து ராதாநல்லூர் கிராம சாலை வழியாக எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தநிலையில், இன்று (மே.8) சூளையிலிருந்து செங்கல் ஏற்றி அதிவேகமாக லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த ராதாநல்லூரைச் சேரந்த விஷ்ணு (22) என்ற இளைஞர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைத்தொடர்ந்து விஷ்ணுவின் உறவினர்கள் செங்கல் சூளைக்கு வரும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் இப்பகுதியில் பல விபத்துக்கள் நடைபெறுவதாகவும், மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்காடு காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.