மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பிரபல யோகா பயிற்றுநர் யோகா ரவி. சிறு வயதிலிருந்தே கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளைக் கற்றுவந்த இவர், 1977-80ஆம் கல்வியாண்டில் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பி.காம் பயின்றார்.
அப்போது நடைபெற்ற கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அனைவரது முன்னிலையிலும் தன்னுடைய நண்பர் பாண்டியன் உதவியுடன் தனது கை, தோள், இடுப்பு, தொடை என 10 இடங்களில் ஓடுகளை உடைத்து சாதனை நிகழ்த்தினார்.
இளமை திரும்புதே
அதன்பின், ரவி யோகா கலையைப் பயின்று அக்கலையில் தேர்ச்சிப் பெற்று, தற்போது சென்னையில் தங்கி நாடு முழுவதும் ஏராளமான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்துவருகிறார். 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் நேற்று மயிலாடுதுறையில் பேராசிரியர் வீட்டில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் இளமைப் பருவத்தில் நிகழ்த்தியச் சாதனையை தனது 60ஆவது வயதில் மீண்டும் நிகழ்த்தினார்.
வயது முதிர்வின் காரணமாக ரயில்வே ஓட்டினை தலைப் பகுதியில் உடைக்க வேண்டாம் என்று நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலையைத் தவிர்த்த பிற இடங்களில் எட்டு ஓடுகளை தனது நண்பன் பாண்டியன் உதவியுடன் உடைத்தார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது ஓய்வுபெற்ற தனது கல்லூரி பேராசிரியர் வன்மீக வெங்கடாச்சலம் முன்னிலையில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
கராத்தே போன்ற கலைகளின் மூலம் மட்டுமின்றி, யோகா கலையின் மூலமாகவும் உடலினை உறுதியாக இரும்பு போன்று வைத்திருக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக யோகா ரவி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் 13 பேர் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.