மயிலாடுதுறை : மூவலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ராஜ்குமார்(20). கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பணிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இன்று (அக்.31) காலை மயிலாடுதுறை அருகே மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்தர்காடு தெற்கு வீதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன்(22), குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் ராஜ்குமாரை அடித்துக்கொன்றது தெரியவந்தது.
இந்த மூவரும் இணைந்து சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும், இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே கொலை நேரிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் பதுங்கியிருந்த கபிலன் மற்றும் சிறுவனை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கொலை நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்த தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கணவன் மனைவி சடலமாக மீட்பு - போலீஸ் விசாராணை