நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளில் சென்ற மாதம் 4.5 கிலோ வெள்ளிப்பொருள்களும், 59 சவரன் தங்க நகைகளும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதனையடுத்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்திரனம், உத்தரவின் பேரில் நகர காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து புலனாய்வு செய்து அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் சட்டையப்பர் மேலத்தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் மனோஜ் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது தன்னுடன் பழக்கமான திண்டுக்கல் சேர்ந்த ராஜசேகர் (28) மற்றும் வெள்ளைபாண்டி (29) ஆகியோரின் உதவியோடு மூன்று வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்து அவரிடமிருந்து 23 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை மீட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டலின் படி உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் நூதன முறையில் 5 சவரன் தங்க நகை கொள்ளை!