மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுர ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தில் இதுவரை 26 குருமகாசன்னிதானம் அருள் ஆட்சி செய்துள்ளனர். தற்போது 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக வாழ்ந்து மறைந்த ஆதினகர்த்தர்களின் உடல்கள் ஆதினத்தை சுற்றியுள்ள இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் ஆதீனத்தின் காவிரிக்கரை செல்லும் திருமஞ்சன வீதியில் ஆதீனகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் எனும் நினைவிடம் அமைந்துள்ளது.
இந்த குருமூர்த்தத்தில் கடந்த 2ஆம் தேதி 20ஆவது குருமகாசன்னிதானத்திற்கு குருபூஜை நடந்தது. அதன் பின்னர் ஆதீன ஊழியர்கள் அங்கு சென்றபார்த்தபோது குருமூர்த்தத்தின் விமானத்திலிருந்த ஒரு கலசங்கள், முகப்புப் பகுதியிலுள்ள நுழைவாயிலின் மேல் பகுதி கோபுரத்தில் இருந்த நான்கு கலசங்கள் என மொத்தம் ஐந்து கலசங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த கலசங்களின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆதீனத்தின் பொதுமேலாளர் கோதண்டராமன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முசிறியில் நள்ளிரவில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு!