மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கி.பி.1620ஆம் ஆண்டு, 'டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப்' என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது.
போர் வீரர்கள் தங்கும் அறை, ஆயதக்கிடங்கு, சமையல் அறை,தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னமாக விளங்கும் 'டேனிஷ் கோட்டை' இரண்டுமுறை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்துசெல்வது வழக்கம்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றியும் உள்ளூர் மக்கள்கூட செல்லாமலும் பொலிவிழந்து கிடந்த தரங்கம்பாடிக்கு, ஊரடங்குத் தளர்வுகளால், தற்போதுதான் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மகாளய அமாவாசை தினமான இன்று காவிரிக்கரை மற்றும் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை ஆகிய இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு கூடும்பட்சத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதனால் இன்று தரங்கம்பாடி கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரைக்கு வந்த ஒருசில சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர். மேலும் கடற்கரையோர காவல் படை, பொறையார் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.