மயிலாடுதுறை: வானாதிராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஹாஜாமைதீன் மனைவி தாவூத்பீவி (90). இவர் தன் கணவர் இறந்த பின்னர் இளைய மகன் அசரப் அலியுடன் (Ashraf Ali) வசித்து வந்தார். இவரது மகன் வெளிநாடு சென்றதும் மருமகள் சிராஜிநிஷா கடந்த மாதம் மூதாட்டியை வீட்டைவிட்டு விரட்டி விட்டார்.
அவருக்கு அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டுவந்த நிலையில், கடந்த மாதம் 4ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மனு நீதிநாள் முகாமில் கலந்துகொண்டு, தனது பிள்ளைகள் தன்னை ஏற்றுக்கொள்ளாமல், உணவு கொடுக்காமல் துரத்தி வருவதாகவும், சொத்தை மகன்களிடமிருந்து பெற்றுத்தரவும், இல்லாவிடில் தன்னை கருணை கொலை செய்துவிடுமாறும் கோரியிருந்தார்.
இதையடுத்து, வருவாய்த்துறையினர் அசரப்அலி வீட்டில் மூதாட்டியை ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்குமாறு சொல்லித் தங்க வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் மழை நேரத்தில் வீட்டைவிட்டு மீண்டும் தாவூத்பீவியை வெளியேற்றி வாசற்கதவை அவரது மருமகள் பூட்டியுள்ளார். இச்செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் உத்தரவின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் மூதாட்டியின் மூத்த மகன் ஷேக் அலாவுதீனை அழைத்து தாயை பாதுகாக்க தவறினால் சட்ட நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், உள்ளூர் ஜமாத்தார்கள் பேசி உடனடியாக தீர்வுகாணுமாறும் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் வானாதிராஜபுரம் ஜமாத்தா, வட்டார ஜமாத் கூட்டமைப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மூத்தமகன் ஷேக் அலாவுதீன் வீட்டில் இரண்டு மாதமும், இளைய மகன் அசரப்அலி வீட்டில் இரண்டு மாதம் என மூதாட்டியை ஆயுட்காலம் முழுவதும் பாதுகாக்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, குத்தாலம் காவல் துறையினர் மூதாட்டியை ஷேக் அலாவுதீன் வீட்டில் ஒப்படைத்தனர். தாவூத்பீவியை முறையாகக் கவனித்துக் கொள்கின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் குத்தாலம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 90 வயது தாயை வீட்டை விட்டு விரட்டிய பிள்ளைகள் - ஒருவேளை உணவுக்கு கையேந்தும் அவலம்!