நீலகிரி: உதகையை அடுத்துள்ள முள்ளிக்கரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் 'அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம்' செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் உள்பட 87 பேர் உள்ளனர்.
உதகை நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கிவரும் இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.40 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக பொருளுதவி மற்றும் பண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில், அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ‘இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரித்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிப்பார்கள்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊட்டி முதியோர் இல்லத்தில் முறைகேடு? பணம், நகை கையாடல்? 3 பேர் கொண்ட குழு தீவிர விசாரணை!
அதன் அடிப்படையில், உதகை கோட்டாட்சியர் மகாராஜ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, தனி வட்டாட்சியர் சங்கீதா ராணி தலைமையிலான குழுவினர், அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகத்தில் நேற்று நேரில் சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். இதில், காப்பகத்தில் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகி தஸ்தகீரிடம் விளக்கங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம், அதன் நிர்வாகி தஸ்தகீரிடம் இருந்து மீட்கப்பட்டு, உதகை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது, உதகை நகர துணை கண்காணிப்பாளர் யசோதா தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்