நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, `தான்தோன்றி' என்ற தன்னார்வ நிறுவனம், கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து நடத்தியது.
இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் விதைப்பந்துகள் தயார் செய்தனர். மாட்டுச் சாணம், எரு மண் கலந்த கலவையில் விதைப்பந்துகள் தயாரிப்பதற்கு, நாட்டுமர விதைகளான பூவரசு, வாகை, சிலவாகை, கருவாகை, ஆணைகுண்டுமணி, இலுப்பை, பரம்பை, எனப் பல வகையான விதைகள் பயன்படுத்தப்பட்டன.
தொடர்ந்து, உருவாக்கப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் விதைப்பந்துகளை, சில தினங்களுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள குளக்கரை, ஆற்றங்கரை, ஏரிக்கரை உள்ளிட்ட பல் இடங்களில் வீசவுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தான்தோன்றி அமைப்பின் நிறுவனர் கார்த்திக் கூறுகையில்: “கஜா புயலால் நாகை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அதற்கு ஈடாக மரங்களை வளர்க்க ஆரம்பிக்கப்பட்டதுதான் விதைப்பந்துகள் உருவாக்கும் திருவிழா. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் விதைப்பந்து திருவிழா நடத்தி டெல்டாவில் இழந்த மரங்களை மீண்டும் உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் கூறுகையில்: “விதைப்பந்து மூலம் கஜா புயலால் விழுந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இது மட்டுமின்றி ஒவ்வொரு தனி மனிதனும் மரங்களை நட முன்வரவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு மரம் வளர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சியில் இறங்கிய பள்ளி மாணவர்கள்!