நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை 13 இடங்களில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் 20 அடி ஆழத்திற்கும் மேலாக பள்ளங்கள் ஏற்பட்டன.
இதனை நகராட்சி அலுவலர்கள் சரி செய்தபோதிலும், பாதாள சாக்கடையின் ஆள்நுழைவுத் தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறி மழைநீர் வடிகால், வாய்க்கால்கள் ஆகியவற்றின் வழியாக காவிரியாற்றில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்ட குறைபாடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கழிவு நீர் வெளியேறுவதை உடனடியாக தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வள்ளலார் கோயில் மேலத்தெருவில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறி பிரசித்தி பெற்ற வள்ளலார் கோயிலிலுள்ள குளத்தில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த செலவில் சேதமடைந்த சாலையைச் சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்... பொதுமக்கள் பாராட்டு!