நாகப்பட்டினம்: அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், ஆறுமுகம், மணிகண்டன் உள்ளிட்ட 12 மீனவர்களும், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒன்பது மீனவர்கள் என 21 மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கோடியக்கரை தென் கிழக்கே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களை அங்கு வந்த இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இதனால், நடுக்கடலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களுக்கும், இலங்கையைச் சேர்ந்த மீனவர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று (ஜனவரி 31) முதல் பருத்தித்துறை, சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும், 21 மீனவர்களையும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 56 மீனவர்கள் இன்னும் தாயகம் திரும்பாத நிலையில் மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாகப்பட்டினம் மீனவர்கள் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - மா.சுப்பிரமணியன்