நாகை மாவட்டம் சாமந்தான் பேட்டை மீனவக் கிராமத்தில் 3, 000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்துவருகின்றனர். இக்கிராமத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சட்டபேரவையில் அதிமுக அரசு 110 விதியின் கீழ் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என அறிவித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இது தொடர்பான பணிகள் இதுவரை தொடங்கப்படாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மீனவர்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (டிச. 21) முதல் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து சாமந்தான் பேட்டை மீனவக் கிராம கடற்கரை பகுதியில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடிகளை ஏந்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.
தூண்டி வளைவு இல்லாத காரணத்தால் பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாக்க கடும் சிரமத்தை சந்திப்பதாகக் கூறியுள்ள மீனவர்கள், வண்டி வைத்து இழுத்தும், தோளில் சுமந்து செல்வதாலும் அதிக செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக மீன் இறங்கு தளம் கட்டுமானப் பணியினை தொடங்கவில்லை என்றால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கபோவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி தமிழ்நாடு அரசுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க... வேளாண் சட்டங்கள்: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!