மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை காவலர்கள், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோயில் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி கோபு மகன் சூர்யா(24) என்பவர் அதே பகுதியிலுள்ள ராஜதுரை என்ற முதியவரின் வீட்டு பின்புறத்தில் 35 லிட்டர் கொள்ளவுள்ள 54 கேன்களில் 1,890 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை மண்ணில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சாராய கேன்களை பறிமுதல் செய்த காவலர்கள் சூர்யாவை கைது செய்து பாலையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலையூர் காவலர்கள், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் டோக்கன்: வீடுவீடாக சென்று கொடுத்த எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ்!