மயிலாடுதுறை: மாவட்டத்தில் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அரண்மனை நகரில் உள்ள மேதா ஸ்ரீகணபதி கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் பேசுகையில், "விநாயகப் பெருமானை வழிபட்டு தொடங்கும் அனைத்து காரியங்களும் நலமாக நடைபெறும். இப்பகுதி விவசாய பகுதி. விவசாயிகளுக்காக காவிரியைக் கொண்டுவந்தது விநாயகப் பெருமான் என்கிறது புராணம். விநாயகர் வழிபாடு செய்யாமல் எந்தகாரியத்தையும் தொடங்கக் கூடாது.
சிவபெருமான் விநாயகரை வழிபடாமல் தேரில் ஏறியபோது தேரின் அச்சு முறிந்தது. அதனால்தான் அவ்வூர் அச்சுருபாக்கம் என்று அழைக்கப்பட்டது. முருகபெருமான் வள்ளி திருமணம் செய்யும்போது விநாயகர் உறுதுணையாக இருந்தார். விநாயகர் பெருமானை வழிபாடு செய்தால் எல்லா காரியமும் வெற்றிகிடைக்கும்.
மகாபாரதத்தை தனது கொம்பினை வைத்துக்கொண்டு எழுதியவர் விநாயகர். எனவே, எந்த காரியத்தை செய்யும் முன்னரும் விநாயகரை வழிபட வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையை காண குவிந்த பக்தர்கள்