தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டிற்கு வருகைதந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டிலுள்ள டிவைன் வேர்டு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிவரும் நாகை காடம்பாடி பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ், அந்நாட்டிலுள்ள தனது நண்பர்களைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அதன்படி பப்புவா நியூ கினியா நாட்டின் அங்கோரம் தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் லியோ மாலியோ, அவரது நண்பர்களான பயஸ்நும்படாய், வெஸ்லி பீசோ, ஜார்ஜ், மானசேரா ஆகியோர் இன்று காலை காடம்பாடி பகுதி மக்களோடு இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டினர், பொங்கல் பொங்கியபோது பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியா வந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய, லியோ மாலியோ தமிழர்களின் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியது புதிய அனுபவமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுற்றுலாத் துறை சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!