ஆறு காட்டுத்துறையைச் சேர்ந்த பாரதிதாசன், பொற்செல்வன், ஐய்யப்பன், ராமச்சந்திரன் ஆகிய நான்கு மீனவர்களும் பைபர் படகு ஒன்றில் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு மற்றொரு படகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீனவர்களை கம்பி, கத்தி போன்றவைகளால் பலமாகத் தாக்கியுள்ளனர்.
![fisherman attack in nagai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-fisherman-attack-vis-7204630_26072020224421_2607f_1595783661_1031.jpg)
இதில் படகில் இருந்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டதால் உடனே கரைத் திரும்பினர். தாக்குதலில் பாரதிதாசன், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். கரைத் திரும்பிய இவர்களை மீன்வளத்துறை அலுவர்களும், காவல்துறையினரும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
![fisherman attack in nagai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-fisherman-attack-vis-7204630_26072020224420_2607f_1595783660_450.jpg)
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வேதாரண்யம் கடலோர காவல் படை காவல்துறையினர், மீனவர்களை தாக்கியவர்கள் இலங்கை மீனவர்களா அல்லது கடல் கொள்ளையர்களா என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாகை மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.